Monday, November 25, 2013

தன்னை ஒருவன் ஒடுக்கும் போது எதிர்த்து நின்ற போராடி அவனை அடக்குவதற்குப் பதிலாக, அவன் மேலுள்ள ஆத்திரத்தை தனக்குக் கீழுள்ள ஒருவனை அடித்து உதைத்து துன்புறுத்துவதன் மூலம் தணித்துக் கொள்ளும் அற்பத் தனமான சாதிய சிந்தனைக்குள் யாழ்ப்பாண சமுகம் மூழ்கிப்போயிருந்தது .இனி......
 ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் 1955 ம் ஆண்டிலிருந்து 1965 ம் ஆண்டுவரையிலான 10 வருடகாலப் பகுதி; மிக முக்கியமான ஒன்றாகும். 1957 ல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். 1958 ல் நடந்த இனக் கலவரம் 1961 ல் நடைபெற்ற சிறீ எதிர்ப்புப் போராட்டம். 1961லிருந்து 1964 வரை தொடர்ச்சியாக நடந்த தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் என்பன தமிழ் மக்களுடைய குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுடைய இருப்பிலும் கருத்தியல் தளத்திலும் காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன.
ஈழத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்ற மூன்று வாழ்வியல் தளங்களை கொண்டவர்கள். இதில் யாழ்ப்பான சமூகமும் அதன் வாழ்வியல் தளமும் மட்டுமே இறுக்கமான சாதியக் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. சாதி என்பது தமிழர்களுடைய அடையாளம் என்று இந்த சமூகம் நம்பியது.
யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்பு கட்டுள்ள சாதிகள், கட்டற்ற சாதிகள், கட்டுள்ள கலப்புச் சாதிகள், கட்டற்ற கலப்புச் சாதிகள் என்ற நான்கு வரையறைகளைக் கொண்டவையாக இருந்தது.
வெள்ளாளர், பிராமணர், கோவியர். நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர், ஆகிய சாதிகள் கட்டுள்ள சாதிகளாக இருந்தன. இதில் வெள்ளாளரும் பிராமணர்களும் அதிகார வர்க்க சாதியினராகவும் ஏனையோர் அடிமைச் சாதியினராகவும் இருந்தனர்.
இந்தியாவை பொறுத்தவரை பிராமணர்கள் முதன்மைச் சாதியினராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களுக்கு அடுத்த இடத்திலேயே அவர்களது நிலை இருந்தது.
இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டின்படி வெள்ளாரர்கள் சூத்திரர்கள் என்ற அடிமட்ட சாதிப் படிநிலைக்குள் அடக்கப்பட்ட போதிலும் ஆறுமுக நாவலர் அதை மறுதலித்து வெள்ளாளர்களை சற்சூத்திரர்கள் அதாவது பிராமணர்களுக்கு நிகரானவர்கள் என்று நிறுவியதும் நிலமும் கோவில்களும் வெள்ளாளர்களுடைய ஆதிக்கத்திலேயே இருந்ததும் பிராமணர்கள் அவர்களது கோவில்களில் ஊழியம் செய்பவர்களாக இருந்ததுமே அவர்களது சாதிப் படி நிலையை பின் தள்ளிவிட்டது.
இந்த கட்டுள்ள சாதி அமைப்பில் கோவியரும் பஞ்சமர்கள் எனப்படும் நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகியோரும் வெள்ளாளர்களுடைய குடிமைகளாக கருதப்பட்டார்கள். 1970ம் ஆண்டு வரை குடிமை முறை எனப்படும் இந்த அடிமைச்சேவகம் கட்டாயப் படுத்தப்பட்டிருந்து. கோவியர்கள் வெள்ளாளர்களுடைய வீட்டு வேலைகளை செய்வதும் அவர்களது உடமைகளாக இருந்த கோவில்களுக்கு ஊழியம் செய்வதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.
ஏனைய பஞ்சமர் சாதிகள் வெள்ளாளர்களின் விளை நிலங்களில் கூலியின்றி வேலை செய்து கொடுப்பது, அவர்களது வீட்டு திருமண ஊர்வலங்களில் “கா” காவிச் செல்வது. அதாவது ஒரு தடியில் ஒரு முனையில் வாழைக்குலை பலாப்பழம்; முதலான பழ வகைகளையும் மறு முனையில் அரிசி முதாலான உணவுப் பண்டங்கள் மற்றும் பாத்திங்கள் முதலான சீர் வரிசைகளையும் கட்டித் தொங்க விட்டு அந்தத் தடியை தோழில் வைத்து அந்த ஊர்வலம் முடியும் வரை காவிக் கொண்டு செல்வதே “கா” காவுதலாகும். மரச்சடங்கில் பாடை கட்டுவது (பெண்கள்) குடக் குரவை வைப்பது மயானத்தில் பிணத்தை எரியூட்டுவது என்று இந்தக் குடிமை முறை நீண்டு கொண்டு செல்லும் .
இதில் கோவியர் நளவர் என்ற இரண்டு சாதிகளும் இந்தியாவில் இல்லாத யாழ்ப்பாணக் குடாநாட்டில் தோற்றம் பெற்ற சாதிகளாகும். இதிலே நளவர்களுடைய தோற்றம் பற்றி யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் தொன்மையான நூலான யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்பட்டள்ளது.
சங்கிலி மன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து நம்பிகள் என்ற சாதியைச் சேர்ந்த 64 கத்திக்கார்கள் அவர்களது குடும்பத்தினருடன் மன்னனுடைய மெய்ப்பாதுகாப்புக்காக அழைத்துவரப்பட்டதாகவும்.; அந்த கத்திக்காரர்களுக்கு தலைமை தாங்கிய நம்பியினுடைய மகளை சங்கிலி மன்னனுடைய மகன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திவிட்டதால் ஆத்திர மடைந்த அந்த தலைமை நம்பி அவனைக் கொன்றுவிட்டதாகவும் யாழ்ப்பாண வைபவ மாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய மகனை கொன்ற குற்றத்துக்காக தலைமை நம்பியை தலை வெட்டிக் கொன்ற சங்கிலி மன்னன் ஏனைய நம்பிகளை அரண்மனையிலிருந்து துரத்திவிட்டதாகவும் பிழைப்புக்கு வழியில்லாத அவர்கள் அந்தக்காலகட்டத்தில் மரமேறும் தொழிலைச் செய்து வந்து சானாருடன் சேர்ந்து அந்தத் தொழிலைச் செய்யப் பழகிக் கொண்டதாகவும் இவ்வாறு குலத்தொழிலை விட்டு நழுவி வேறு தொழிலைச் செய்ததால் நழுவிகள் என்று அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அதுவே நளவர்கள் என்று ஆகிவிட்டதென்றும் யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டற்ற சாதிகளாக முக்குவர் திமிலர் தட்டார் செட்டிகள் முதலானவை இருந்தன. இந்தச்சாதிகள் தங்களுக்குள் இறுக்கமான கட்டுக் கோப்பையும் அகமணமுறையையும் கொண்டவையாக இருந்த போதிலும் கட்டுள்ள சாதிகளைப் போல அடிமை குடிமைகளை கொண்டவையாக இருக்கவில்லை.
கட்டுள்ள கலப்புச்சாதிகள் என்ற வரையறைக்குள் நட்டுவர்கள் பண்டாரிகள்; முதலானோர் அடக்கப்பட்டனர். தங்களுக்குள் தங்களுக்கு இணையான சாதியனருடன் உறவுகளை பேணிவந்த இவர்கள் அடிமை குடிமைகளை ஒடுக்கும் விடயத்தில் வெள்ளார்களுக்கு இணையானவர்களாகவே இருந்தார்கள்.
கட்டற்ற கலப்புச்சாதிகளாக கரையார் தச்சர் கொல்லர் குயவர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.அதிகளவுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட இந்தச் சாதியினரிடையே தீண்டாமையும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் மனோபாவமும் ஏனைய மேல்தட்டு மற்றும் இடைநிலை சாதியினரைவிடக் குறைவாகவே இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் எனையபகுதிகளை விட கரையார சாதியினரை அதிகமாகக் கொண்ட வடமராட்சி கிழக்கு பகுதிகள் சாதிய ஒடுக்குமுறை மிகக் குறைந்த பகுதிகளாக இருந்ததும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1697ம் ஆண்டு ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்தில் 40 சாதிகள் இருந்ததாக குறிக்கப்பட்டிருக்கிறது.தற்போது 15 முதல் 20 சாதிகளே வழக்கில் இருப்பதாகவும் அதிலும் சில சாதிகள் மறைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் 2000ம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
1900 த்தின் ஆரம்பத்திலிருந்து 1980களின் நடுப்பகுதி வரையிருந்த யாழ்ப்;பான சமூகத்தின் அதிகார வர்க்கத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். இதில் ஒரு பகுதியினர் கல்வியையும் இன்னொரு பகுதியினர் வர்த்தகத்தையும் மற்றொரு பகுதியினர் சிறு விவசாயத்தையும் தங்களுடைய வாழ்வாதாரங்களாகக் கொண்டிருந்தனர். இவர்களில் சிறு விவசாயிகள் தவிர்ந்த ஏனையோரில் கணிசமான பகுதியினர் தங்களது தொழில் நிமித்தம் கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தங்கிருந்தனர்.
பொதுவாக மனிதர்கள் தாங்கள் கற்ற கல்வியின் மூலம் பெற்றுக் கொண்ட அறிவைக் கொண்டும் ,பல இடங்களுக்கும் சென்று பல தரப்பட்ட மக்களுடன் பழகுவதனால் கிடைக்கும் அனுபவத்தை கொண்டும் தங்களிடமுள்ள பிற்போக்குத் தனங்களை களைந்து தங்களை வளர்த்துக் கொள்வது வழக்கமாகும்.
ஆனால் யாழ்ப்பாண சமூகம் உயர்ந்த கல்வியறிவு பெற்ற சமூகம் என்று தன்னை சொல்லிக்கொண்டாலும், தொழில் நிமித்தம் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறுபட்ட மாற்றின மாற்றுக்கலாச்சார மக்களுடன் பழகிய போதிலும், பிறப்பைக் கொண்டு மனிதனை இழிவு செய்யும் சாதியத்தை அது கைவிடத் தயாராக இல்லை. தன்னை ஒரு சாதிய சமூகம் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதில் யாழ்ப்பாண சமூகம் இந்திய சாதியச் சமூகத்தக்கு எந்தவிதத்திலும் குறைந்தாக இருக்கவில்லை.
1958ல் சிங்கள பௌத்த பேரினவாதம் வெறி கொண்டு எழுத்து தாக்கிய போது அந்தக்காலகட்டத்தில் அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட அந்த சமூகம் அடக்குமுறையின் தாக்கத்தையும் வேதனையையும் வலியையும் உணர்ந்து தங்களை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ எதிர்மாறாக இருந்தது.
1958 ற்கு முன்னர் தங்களது தொழில் நிமித்தம் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சென்ற அதிகார வர்க்கப்பிரிவினரது விளை நிலங்களும் ஏனைய குடியிருப்பு மற்றும் தரிசு நிலங்களில் இருந்த பயன் தரு மரங்களும் (பனை, தென்னை,பலா,புளி) அவர்களது குடிமைகளான பஞ்சமர்களால் குத்தகைக் குடிமை முறை என்ற அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த முறையின் படி ஆண்டைகளின் விளைநிலத்திலிருந்து பெறப்பட்ட உற்பத்தியின் 50 வீதத்தை அவர்களின் குடிமைகள் பொருளாகவோ பணமாகவோ வழங்க வேண்டும். இது குடிமை முறைப் பொருள் அல்லது பணம் என்று அழைக்கப்பட்டது.
1958 இனக்கலவரம் வரும் வரை இந்த ஆண்டைகள் கண்ணுக்கு எட்டாத தொலை தூரத்தில் இருந்தாதால் அவர்களது குடிமைகள் ஓரளவுக்கு தங்களது தொழிலை சுதந்திரமாகச் செய்யக் கூடியதாக இருந்தது. அது வரைஉள்ளுரில் கோவில்களையும் நிலத்தையும் வைத்து அதிகாரம் செலுத்திவந்த அதிகார வாக்கத்துக்கும் அவர்களது குடிமைகளுக்கும் இடையிலான முரண்பாடாகவே சாதிய முரண்பாடு இருந்தது.
1958 இனக்கலவரத்தில் சிங்கள இனவெறியர்களால் தங்களது இருப்பும் தேட்டமும் அழிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக கப்பல் மூலம் பருத்தித்துறை துறை முகத்தில் வந்திறங்கிய மக்களுக்கு தங்களை விட தங்களது குடிமைகள் பொருளாதார ரீதியில் பலமுள்ளவர்களாக இருந்தது ஒரு கௌரவப் பிரச்சனையாக இருந்தது. அதை விட செல்வச் செழிப்போடும் சமூக அந்தஸ்த்தோடும் வாழ்ந்த தாங்கள், தங்களது உறவுகளாலேயே ஏளனமாகப் பார்க்கப்படும் பரிதாப நிலையும் அவர்களுக்கு எற்பட்டிருந்தது.
எனவே யாழ்பாண சமூகத்தில் மறுபடியும் தங்களது அதிகாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கு நில உடமை மூலம் தங்களுக்கு இருந்த உரிமையை கையில் எடுத்து சாதிய பாரம்பரியத்தையும் சாதியக் கலாச்சாரத்தையும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பதில் தாங்களே முன்ணியில் இருப்பவர்கள் என்று அவர்கள் காட்ட முற்பட்டார்கள்.
தன்னை ஒருவன் ஒடுக்கும் போது எதிர்த்து நின்ற போராடி அவனை அடக்குவதற்குப் பதிலாக, அவன் மேலுள்ள ஆத்திரத்தை தனக்குக் கீழுள்ள ஒருவனை அடித்து உதைத்து துன்புறுத்துவதன் மூலம் தணித்துக் கொள்ளும் அற்பத் தனமான சாதிய சிந்தனைக்குள் யாழ்ப்பாண சமுகம் மூழ்கிப்போயிருந்தது.
1958 லிருந்து 1968 வரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாதிய முரண்பாடு என்றுமில்லாதவாறு உச்சமடைந்ததற்கும் வெட்கக்கேடான பல சாதியக் கலவரங்கள் நடைபெற்றதற்கும் இதுவே அடிப்படையாகும்.
பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போரை ஆரம்பித்த போது அதற்கு எதிராக தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டுப் போராடுவதற்குப் பதிலாக தமிழர்களே தமிழர்களை சாதியின் பேரால் அடக்கி ஒடுக்கியது தமிழ் தளத்தில் இருந்த கருத்தியல் வறுமையும் தமிழினத்தின் சாபக்கேடுமாகும்.
அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுடைய அரசியல் தளத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி,தமிழ் காங்கிரஸ் கட்சிறு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (சண்முகதாசன் தலைமையிலானது) என்பன செல்வாக்கு செலுத்தும்; கட்சிகளாக இருந்தன.
இதில் தமிழரசுக்கட்சியும் தமிழ் கொங்கிரஸ் கட்சியும் மட்டுமே தமிழ் மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகவும் நாடாளுமன்ற அரசியல் பாதையை ஏற்றுக் கொண்ட கட்சிகளாகவும் இருந்தன.
இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி(சீனச் சார்பு) ஒட்டு மொத்த இலங்கையிலுள்ள மக்களுக்கான கட்சியாகவும் முதலாளித்துவ அடிப்படையிலான நாடாளுமன்ற அரசியலை நிராகரித்த கட்சியாகவும் இருந்தது.
தமிழ் மக்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது சம உரிமை கேட்டுப் போராடிய தமிழ் கொங்கிரஸ் கட்சியும், சமஷ்டி ஆட்சியுரிமை கோரி உண்ணா நோன்பு, சாலை மறியல்,நிர்வாக முடக்கல், சிங்கள சிறீ எதிர்ப்பு என்று பல் வேறு போராட்டங்களை நடத்திய தமிழரசுக்கட்சியும், தமிழினத்தை கூறுபோடும்-உடனிருந்தே கொல்லும் சாதியத்தை ஒழிப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்தக் கட்சிகள் இன உரிமைப் போராட்டம் மொழிப் போராட்டம் என்பவற்றை நடத்திய 1958-68 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த 90 வீதமான ஆலயங்கள் 80 வீதமான தேனீர்கடைகள் மற்றும் உணவு விடுதிகள் 40 வீதமான பாடசாலைகள் என்பவற்றில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட எமக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 1957ல் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சமூகக் குறைபாடுகள் சட்டத்தின் கீழ் அரசாங்க மற்றும் அரசாங்க நிதி உதவிபெறும் பாடசாலைகளில் கல்வி கற்க எமக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவ்வாறான 80 வீதமான பாடசாலைகளில் எமக்கான சமத்துவம் மறுக்கப்பட்டிருந்தது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே கடைப்பிடிக்கப்பட்டது.

1957 ம் ஆண்டு பருத்தித்துறைத் தொகுதியின் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொன்.கந்தையாவின் முயற்சியினால் அப்போதைய எஸ்.டபிள்யூ.ஆர் டி.பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தஹாநாயக்காவினால் பருத்தித்துறை கரவெட்டி, சாவகச்சேரி, கோப்பாய் காங்கேசன்துறை மானிப்பாய் ஆகிய இடங்களில் அனைத்து பிள்ளைகளும் சமத்துவமாக படிப்பதற்கென்று 16 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.
ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்தப் பாடசாலைகளில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு அதிகார வர்க்கம் மறுத்தவிட்டது. இந்தப் 16 பாடசாலைகளில் 5 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அதிகார வர்க்கத்தின் குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பாடசாலைகள் குடாநாட்டில் அவசியம் இல்லை என்று அரசாங்கத்திற்கு மனுச் செய்தனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய இந்த அடிப்படை முரண்பாட்டை அவதானித்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் திட்டமிட்டு காய் நகர்த்தினார்கள்.
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பௌத்த மதத்திற்கு மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ஐரோப்பியர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்பவதற்கு கையாண்ட பாணியில் புத்தூர் அச்சுவேலி கரவெட்டி அல்வாய் ஆகிய பகுதிகளில் பௌத்த பாடசாலைகளையும் அதையொட்டி பௌத்த விஹாரைகளையும் அவர்கள் நிறுவினார்கள்.
புத்தூர் பஞ்ஞாசீக வித்தியாலயம்,அச்சுவேலி ஸ்ரீ விபஸ்த்தி வித்தியாலயம், கரவெட்டி மேற்கு ஸ்ரீ நாரதா வித்தியாலயம், அல்வாய் சேய் மகே வித்தியாலயம் என்பனவே சிங்கள பௌத்த நலன்களுக்காக குடாநாட்டில் அமைக்கப்பட்ட பாடசாலைகளாகும்.

சிங்கள பௌத்த பேரினவாத எதிர்ப்பு என்பதை வாக்கு சீட்டு அரசிலுக்காகவும்; தங்களுடைய வர்க்க நலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்திய அன்றைய தமிழ் தலைமைகள் தமிழ்மக்களிடையுள்ள முரண்பாடுகளை கழைந்து உண்மையான தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முன்வரவில்லை.
அன்று தமிழ் தலைவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்களில் ஒர சிலரைத் தவிர மற்ற அனைவரும் இறுக்கமான சாதிய வட்டத்துக்குள்ளேயே இருந்தனர்.பலருடைய வீடுகளின் முன் புறத்தில் நாங்கள் சென்றால் காத்திருப்பதற்கென்று தனிக் கொட்டில்கள் போடப்பட்டிருந்தன. நாங்கள் தண்ணிர் குடிப்பதற்கென்ற தனியான பானைகளும் தனியான மூக்குப் பேணிகளும் கூட வைக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்த பல கோவில்களின் தர்மகர்த்தாக்களாகவும் நிர்வாகிகளாகவும்- உரிமையாளர்களாகவும் தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி என்ற இரண்டு கட்சிகளினதும் பிரமுகர்களும் தலைவர்களும் தான் இருந்திருக்கிறார்கள்.
இவ்வாறு போலித்தனமும் சுயநலமும் மிக்க தமிழ் அரசில் தலைவர்கள் மத்தியில் ஹன்டி பேரின்பநாயகம், நெவின்ஸ்.செல்லத்துரை இந்துபோட் இராஜரட்ணம் சி.தர்மகுலசிங்கம், பொன்.கந்தையா, எம் காத்திகேசு, ஏ.ஈ.தம்பர் எம்.சண்முகதாசன் முதலான பலர் உண்மையிலேயே சாதி அரக்கனை ஒழித்து சமத்துவமான தமிழ் சமூகம் ஒன்றை உருவாக்கவதற்கு பாடுபட்டார்கள்.
இவர்களை விட இன்னொருவர் அரசியலைச் சாராது உண்மையான தமிழ் அடையாளத்தையும் தமிழ் கருத்தியலையும் கண்டறிந்து அதன்படி நடப்பதன் மூலமே தமிழர்கள் ஒன்றுபட முடியும் என்றும் தமிழனமும் தமிழ் மொழியும் தழைக்க முடியம் என்றும் வலியுறுத்தினர்......தொடரும் 

0 comments:

Post a Comment